80-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்தார். இதையடுத்து அவருக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூச்சு விடுவதற்கு விஜயகாந்த் சிரமப்பட்டு வருவதால் அவருக்கு மூக்கு வழியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் அதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியானது. மேலும், விஜயகாந்துக்கு தொண்டையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த நாசர், “விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். சில நாட்களாக வந்து கொண்டிருக்கும் செய்தி மிகைப்படுத்தின செய்தி. நாங்கள் தலைமை மருத்துவரை பார்த்தோம். அவர் மிகவும் தெளிவாக ‘விஜயகாந்த் வருவார் உங்களை பார்ப்பார்’ என்று சொல்லிவிட்டார். அதனால் தயவு செய்து மிகைப்படுத்தின செய்திகளை பரப்பாதீர்கள்” என்று கூறினார்.