அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக அவரது தோழி வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017ம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது என தெரிவித்தார்.
இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டது. சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கட்சியில் இருந்து அவரை நீக்கியது செல்லும் என்பதை உறுதிப்படுத்தினர்.