பா.ஜனதா கட்சியை 2024 நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென்றால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைந்து ஒரே அணியில் திரண்டால்தான் முடிவும் என பீகார் மாநில முதல் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் கருதினர். இதனால் நிதிஷ் குமார், லாலு யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ், உத்தர பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முயற்சி மேற்கொண்டனர். பின்னர் கர்நாடகாவில் இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது இந்திய கூட்டமைப்புக்கு இந்தியா எனப் பெயரிடப்பட்டது. இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் எனத் தெரிவித்தனர். இது பா.ஜனதாவுக்கு சற்று பயத்தை கொடுத்தது. கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து டில்லியில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி கட்சிகளுள் ஆலோசனை நடத்தி தங்கள் பக்கமும் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன என காண்பித்தது.
3-வது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றது. அப்போது தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் இந்த கூட்டணியில் தன்னை முன்னிறுத்திக் கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் ஐந்து மாநில தேர்தல் தேதி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ்க்கு பெரிய அடி விழுந்தது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியை இழந்தது. தெலுங்கானாவில் மட்டும் ஆட்சியை பிடித்தது. இப்போது, காங்கிரஸ் தனியாக நின்றதன் காரணமாக தோல்வியை சந்தித்தது. இந்தியா கூட்டணியில் கட்சியுடன் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் விமர்சனம் வைக்கப்பட்டது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் டில்லியில் இன்று கூடும் என அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் காங்கிரசின் 4 மாநில தேர்தல் தோல்வி நாடாளுமன்ற தேர்தலில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என தகவல் வெளியானது. தங்களது கட்சி பிரதிநிதிகளை அனுப்பி வைக்க முடிவு செய்தனர். முக்கியமான தலைவர்கள் பங்கேற்காமல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றால் அது சரியாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கூட்டம் டிசம்பர் 3-வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.