திருவனந்தபுரத்தில் நகை, நிலம், சொகுசு கார் என்று பெருமளவு வரதட்சணை கேட்டதால் மனமுடைந்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது காதலனும், அரசு டாக்டருமான ருவைஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கேரளத்தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர், முகம்மது அசீஸ். இவருடைய மகள் ஷஹ்னா (வயது 28) எம்.பி.பி.எஸ் முடித்துள்ளார் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை 2ம் ஆண்டு படித்து வந்தார். அப்போது தன்னுடன் ஒன்றாக படித்து வரும் ருவைஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இரண்டு பேரும் திருமணம் செய்யவும் முடிவெடுத்தனர். இதற்கு 2 வீட்டினரும் சம்மதம் தெரிவித்தனர். காதலனை திருமணம் செய்ய போகும் மகிழ்ச்சியில் ஷஹ்னா இருந்தார். ஆனால் திடீரென வரதட்சணையாக 150 பவுன் நகைகளும், 15 ஏக்கர் நிலம், ஒரு பி.எம்.டபிள்யூ கார் வேண்டும் என்று ருவைசின் குடும்பத்தினர் கூறினர். இது ஷஹ்னாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தங்களால் வரதட்சணையாக அவ்வளவு தர முடியாது என்றும், 5 ஏக்கர் நிலம், ஒரு கார், 50 பவுன் நகைகள் மட்டுமே தர முடியும் என்றும் ஷஹ்னாவின் உறவினர்கள் கூறினர். ஆனால் அதை ருவைசின் குடும்பத்தினர் ஏற்கவில்லை.
ஆகவே, காதலனாவது தன்னை வரதட்சணை இல்லாமல் ஏற்றுக் கொள்வார் என்று ஷஹ்னா கருதினார். ஆனால், அவரும் கைவிட்டு விட்டார். இது அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் தங்கி இருந்த விடுதியில் மயக்க ஊசி போட்டு ஷஹ்னா தற்கொலை செய்து கொண்டார். “இந்த உலகில் பணம்தான் அனைவருக்கும் வேண்டும். அன்புக்கு எந்த மதிப்பும் கிடையாது. கூடை கூடையாக கொட்டிக் கொடுக்க பணம் இல்லை” என்று தற்கொலைக்கு முன்பு அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
திருமணத்திற்கு முன்பே வரதட்சணை கொடுமையால் டாக்டர் ஷஹ்னா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக போலீசும், மகளிர் ஆணையமும் விசாரணையை தொடங்கியது.
விசாரணையின் போது கூடுதல் வரதட்சணை கேட்டதன் காரணமாகத்தான் ஷஹ்னா தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது குடும்பத்தினர் கூறினர். தொடர்ந்து அவரது காதலனும் அரசு டாக்டருமான ருவைஸ் மீது திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி போலீசார், ஷஹ்னாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ருவைசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வரதட்சணை கேட்டது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உறவினர்களையும் கைது செய்வது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். ரவைஸ் டாக்டர்கள் சங்க தலைவராக உள்ளார். அந்தப் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.