விவாகரத்தான கணவருடன் வீடியோகாலில் பேசியதால் மகனை கொன்ற அரக்கத்தனம் அம்பலம்
பெங்களூருவை சேர்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனரும், மைண்ட்புல் ஏஐ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் இருந்தவர், சுசனா சேத் (வயது 39). தனது 4 வயது குழந்தையைக் கொன்று சூட்கேசில் அடைத்து கோவாவிலிருந்து பெங்களூரு செல்ல முயன்றார்.
அப்போது காரில் தப்பிக்க முயன்ற சுசனா சேத் போலீசால் பிடிக்கப்பட்டார். அந்தக் காரின் டிக்கியில் இருந்த சூட்கேஸை கைப்பற்றி பரிசோதித்தபோது பெட்டியில் சுசனா சேத்தின் மகனின் உடல் இருந்தது. இதையடுத்து, சுசனா சேத்தை போலீசார் கைது செய்தனர். அவரை 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில் வெளிவந்த தகவல்கள் வருமாறு:
கொல்கத்தாவை சேர்ந்தவர் சூசனா சேத். இவருடைய கணவர் தமிழ்நாட்டை சேர்ந்த வெங்கடரமணா. இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு பெங்களுருவில் வசித்து வந்த இவர்களுக்கு 2019-ம் ஆண்டு சின்மய் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அந்தக் குழந்தைக்கு 4 வயது ஆகிறது.
கருத்து வேறுபாடு காரணமாக 2020-ம் ஆண்டு விவாகரத்து பெற்று இந்த தம்பதி பிரிந்தது.
ஞாயிறுதோறும் கணவருடன் தனது மகன் நேரத்தைச் செலவிட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனால் சூசனா சேத் அதிருப்தி அடைந்தார். தனது கணவர் மகனுடன் வீடியோ காலில் பேசியது சுசனாவுக்கு பிடிக்கவில்லை. இதனாலும் அவர் கணவர்மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
தனது கணவரை பழிவாங்க எண்ணி தனது 4 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனை சுசனா சேத் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுசனா சேத் 2021-ம் ஆண்டு இந்திய அளவில் சிறந்த 100 பெண் தொழில் அதிபர்களின் பட்டியலில் இடம்பிடித்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.