திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த பியூஷ் கோயல், காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தவிர்த்து மற்ற கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்க சாத்தியம் உள்ளது என்றார்.
என்னதான் கூட்டணி கட்சியாக இருந்தாலும் கொள்கை வேறு, கோட்பாடுகள் வேறு என்று அதிமுக-பாஜக கூட்டணி அவ்வப்போது கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அந்த கூட்டணி முறிந்துவிட்டது. இனி எக்காலத்துக்கும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து தெரிவித்து வந்தாலும், பாஜகவின் தேசிய தலைமை இதுவரை கூட்டணி தொடர்பாக உறுதியான எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இதற்கு சமீபத்திய உதாரணம். சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பேட்டி. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்தவர் பியூஷ் கோயல். இந்நிலையில் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக சென்னை வந்த பியூஷ் கோயல், சில பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்த கருத்துதான் தமிழ்நாடு அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.