காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை அண்மையில் இணைத்த ஒய்.எஸ்.ஷர்மிளா ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்படுள்ளார்
ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்த ஜன.4-ம் தேதி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அவரது இந்த செயல்பாடு ஆந்திர அரசியலில் கவனம் பெற்றது. இதனிடையே, ஆந்திராவின் காங்கிரஸ் தலைவராக இருந்த, கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை கடந்த வாரம் அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ராஜிநாமாவுக்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஆந்திர காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளாவை நியமித்து அக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: ஆந்திர காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஒ.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்படுகிறார். இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. அதோடு ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவராக சிறப்பாக பணியாற்றிய, கிடுகு ருத்ர ராஜு காங்கிரஸ் காரிய கமிட்டியின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஒ.எஸ்.ஷர்மிளா அதே மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிலும் ஆந்திர மாநிலத்தில் வரவுள்ள மக்களவை தேர்தலோடு, சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளதால் அம்மாநில அரசியலில் இது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.