முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.
ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 9 ம் தேதி கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவுக்கு நவம்பர் 20ம் தேதி ஆந்திர உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி விசாரித்த நீதிபதி அனிருத்தா போஸ், நீதிபதி பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. தீர்ப்பினை வாசித்த நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். இருவர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை தெரிவித்ததால் அதிக நீதிபதிகளை கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட உள்ளது.