மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, 107 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வருகின்றனர். பல கட்சித் தலைவர்களும் அவரது திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கிண்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அந்த வகையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 107 கிலோ பிரம்மாண்ட கேக்கை வெட்டி, எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு வழங்கினார்.