ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலாச்சாரம். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரித்து புராணம், இதிகாசத்துக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி திசை திருப்பும் வேலையை செய்கிறார்” என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தைத் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் முறையே ஜனவரி 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன 17) காலை 7 மணி அளவில் உறுதிமொழி உடன் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க வீரர்கள் தொடர்ந்து உறுதி எடுத்துக் கொண்டனர்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர். இப்போட்டியை பல்வேறு திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வந்திருந்தனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியது:
“மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், புராணமும் இதிகாசமும் ஜல்லிக்கட்டுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது. ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலாச்சாரம். இதை அவர் திரித்து புராணம், இதிகாசத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறி திசை திருப்பும் வேலையை செய்கிறார். அவரது இந்த செயல்பாட்டின் மூலம் பிரிவினைவாத அரசியலை செய்கிறார்.
ஏற்கெனவே அவர் தமிழக கோயில் சொத்துகள் கொள்ளைப் போவதாக தவறான தகவல்களை தெரிவித்தார். கீழடி அகழாய்வில் தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு மத வழிபாட்டுக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால் கீழடி ஆய்வுத் தளத்துக்கு மத்திய அமைச்சர்கள் வருகை திட்டமிட்டே தவிர்க்கப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தின் ஆணிவேர் கீழடி. தமிழும் திமிலும் தமிழர்களின் அடையாளம்.”
இவ்வாறு அவர் கூறினார்.