மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் சார்பில் புதன்கிழமை மருங்காபுரி அருகில் உள்ள முடுக்குப்பட்டி குறளாலயம் வளாகத்தில் திருக்குறள் தீபாலங்காரம் நூலாசிரியர் மருங்காபுரி ஜமீன்தாரினி கி.சு.வி.இலட்சுமி அம்மணி புகழ் போற்றும் விழா பொங்கல் பெரும் விழா மற்றும் திருவள்ளுவர் திருநாள் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
இந்த நிகழ்வில் பங்கேற்று வேளாக்குறிச்சி ஆதீனம் ஆவது குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று மதிப்புரை நிகழ்த்தினார்.
அவர் பேசிய உரையின் விபரம்:
தமிழ் மொழி உயர்வான மொழி. அருந்தமிழ், தீந்தமிழ், பைந்தமிழ், ஞானத்தமிழ் என்று அருளாளர் பெருமக்களால் போற்றப்பட்டுள்ளது. சங்க கால இலக்கியங்கள் மட்டுமல்ல, பக்தி இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள். சிற்றிலக்கியங்கள் கூட தமிழ் மொழிக்கு தனி அணி சேர்த்திருக்கிறது என்றே சொல்லலாம்.
காலம் கடந்து நிற்கக்கூடிய ஒரு மொழி என்றால் அது தமிழ்தான். அதனாலேயே என்னவோ தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரை, தற்போதைய மேலைநாட்டு மொழிவழி ஆய்வாளர்கள் மிகவும் போற்றுகிறார்கள்.
தமிழ் சமய மொழி மட்டுமல்ல. அது இறைவனுக்கு ஒப்பான இறவாத மொழி. அதனால் தான் திருக்குறளாலயம் என்னும் பெரும் திட்டத்துடன் அரங்கம் அமைப்பது போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியது.
இந்தப் பணியில் ஈடுபட்ட பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையினர் துணிந்து இறங்கியுள்ளதாக பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். முடிந்தால் முடியாதது எதுவுமில்லை. முயற்சி திருவினையாக்கும். இதுவும் வள்ளுவப் பெருந்தகை சொன்னதுதான்.
இந்த மொழி இலக்கணம் இலக்கண வளமையும், இலக்கியச் செறிவும், தொன்மையையும், தனித்தன்மையையும், பல ஆயிரம் ஆண்டு இயங்கு தன்மையைத் தான் ஒரு மொழிக்கு செவ்வியல் மொழி என்ற அடையாளத்தைத் தருகிறது.
அதற்கு முழு வடிவமாக, முழு இயல்பாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து, வழக்கு மொழியாக இயல்பு மொழியாக இருப்பது தனித்தமிழ் ஒன்றே என்று அறுதியிட்டுச் சொல்லலாம்.
இதுபோன்ற குறளாலயம் எழுப்பிடும் தொண்டறம் சிறக்க வேண்டும்.
நமது முந்தைய சந்நிதானம் சொல்வார், ஆதீனங்களின் கட்டுப்பாட்டில் கோயில் நிலங்கள் இருப்பதால் அது இன்னமும் விவசாயத்திற்கு தன்மை மாற்றப்படாமல் பயன்படுகிறது என்று பெருமிதம் கொள்வார்.
அதுபோல வேளாக்குறிச்சி ஆதீனத்தின் அருளாட்சிக்கு உள்பட்ட திருச்செங்காட்டாங்குடியில் முந்தைய வெள்ளத்தின் போது ஊரே வெள்ளக்காடானது. அப்போது, ஆட்களை அழைத்துக் கொண்டு போய் கோயிலில் இருந்த நெல் மூட்டைகளை சமைத்து, அம்மக்களின் பசியாற்றினோம்.
ஆலயங்கள் வழிபடுவதற்கு மட்டுமல்ல. அது தேவைப்படும் போது அறச்சாலைகளாக இருக்கும். ஆதீனங்கள் தமிழ் மொழியை வளர்த்தார்கள் என்பதைவிட, தமிழ் மொழியால் ஆதீனங்கள் வளர்ந்தன என சொல்லலாம்.
குறளாலயம் கட்டி முடிக்கப்பட்ட பின்பு இங்கு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அதேபோல 1928-இல் திருக்குறள் தீபாலங்காரம் நூல் எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரினி கி.சு.வி.இலட்சுமி அம்மணி புகழ் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும்.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், மணக்குடையர், அருணாசலக்கவிராயர், நாமக்கல் கவிஞர் இப்படி அனைவரும் உரை தான் எழுதினார்கள். ஆனால், மருங்காபுரி ஜமீன்தாரினி தான் “திருக்குறள் தீபாலங்காரம்” என பெயர் வைத்தார்.
திருக்குறள் படித்தால் அக இருள் நீங்கி, தீப ஔியாய் ஔிரும் என்பது தான் அம்மையாரின் உட்பொருள். ஆகவே, அம்மையார் அவர்களின் திருக்குறள் தீபாலங்கார நூலை வேளாக்குறிச்சி ஆதீனம் மறுபதிப்பு செய்து வெளியிடும். மேலும், கூட்டம் நடத்துவதற்கு வசதியாக அரங்கம் கட்டித்தருவதற்கும் நமது ஆதீனம் முயலும் என்றார் வேளாக்குறிச்சி ஆதீனம்.
முன்னதாக திருவள்ளுவர், ஜமீன்தாரினி அம்மையார் படங்களுக்கு வேளாக்குறிச்சி ஆதீனம் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்விற்கு மணப்பாறை சிந்துஜா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் பெ.கலையரசன் அவர்கள் தலைமையேற்றார். பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் செயலாளர் வழக்கறிஞர் ஆ.தமிழ்மணி அவர்கள் வரவேற்புரையாற்றினார். பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப் பற்றாளர்,தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மணவை திருக்குறள் பயிற்றக நிறுவனர், திருக்குறள் புலவர் நாவை.சிவம் அவர்களுக்கு பாராட்டும், பட்டயமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சுளுந்தீ நாவலாசிரியர் இரா.முத்துநாகு, மணவைத் தமிழ் மன்றத் தலைவர் புரவலர் செளமா ராசரத்தினம், மருங்காபுரி ஜமீன்தார் சிவசண்முக பூச்சய நாயக்கர்,
மயிலாடுதுறை தமிழ்ச்சங்கத் தலைவர் ஜெனிபர் ச.பவுல்ராஜ், நந்தவனம் மாத இதழ் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகர், டாக்டர் பி.எம்.ராமச்சந்திரன், மணவை இலக்கிய வட்டம் நிறுவனர் கவிஞர் மு.மு.அஷரப் அலி, மணவைத் தமிழ்மன்றச் செயலாளர் கவிஞர் கோ.நவமணி சுந்தரராசன், ஆசிரியர் விழிகள் ராஜ்குமார் ஆகியோர் உரையாற்றினார்கள்.
பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் ஆ.துரைராஜ், எம்.கே.முத்துப்பாண்டி, இரா.கார்த்திகேயன் சி.ராஜகோபால், இரா.கலைக்கோவன், தமிழ் ஆர்வலர்கள்
எம்.ஆர்.பாலுசாமி, சரவண கணேசன், வைகோ பழனிச்சாமி, பா.பாதுஷா, புஷ்பா சுப்ரமணியன்,
சி.பீட்டர், ப.சுப்ரமணியன், மேட்டுக்கடை பொ.சண்முகம், எஸ்.தர்மராஜ், டி.வி.எஸ். பொன்னுச்சாமி, மருதை, மோகன் பெரியகருப்பன், ஆரோக்யரெக்ஸ் தன்ராஜ், க.அண்ணாத்துரை, நா.ரேணுகாதேவி இராமசாமி, ஆசிரியர் மன்னர் மன்னன், இளையராஜா, காவிரி இலக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பிரபு, நா.சண்முகம், மணவை தமிழ்ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நிறைவில் வேளாக்குறிச்சி ஆதீனம், கவிஞர் மு.மு.அஷ்ரப் அலி, ஜெனிபர் பவுல்ராஜ் ஆகிய மூவரும் இணைந்து மரக்கன்றுகளை நட்டது சிறப்புக்குரியது.