கடந்த ஆண்டின் (2023) டிசம்பர் 17,18 ஆகிய தேதிகள் திருநெல்வேலிக்கும், தூத்துக்குடிக்கும் கருப்புப் பக்கங்களாக வரலாற்றில் பதிவாகி விட்டன.
30 மணிநேரமாக இடைவிடாமல் கொட்டிய பெருமழை காரணமாக, தாமிரபரணி பொங்கிப் பிரவாகம் எடுத்து, கரையோரப்பகுதிகளை மூழ்கடித்து (உயிர்ச்சேதம் குறைவு எனினும்) கணக்கிட முடியாத அளவுக்கு பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்தி விட்டு, இன்று அமைதியாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
பஸ்கள் ஓடிய பாதையில் படகுகள் ஓடின பேரழிவு நிகழ்ந்த அன்று நெல்லை சந்திப்பில் பஸ்கள் ஓடிய பாதையில் (மீட்பு) படகுகள் ஓடின. கார்களும், இரு சக்கர வாகனங்களும், ஆட்டோக்களும் படகுகளுக்கு அடியே மூழ்கிக் கிடந்தன.
ஜங்ஷனின் தரைத்தள வீடுகளும்,கடைகளும் அடியோடு மூழ்கி விட்டன.
சுனாமிக்கு இணையான இப்பேரழிவு நிகழ்ந்து ஒரு மாதம் உருண்டோடி விட்டது. பாதிப்புக்கு ஆளான பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டாலும், பேரழிவின் வடுக்கள் இன்னும் ஆறாத ரணங்களாக காட்சி தருகின்றன.
திருநெல்வேலி சந்திப்பில், ‘ஆற்றுச்சுனாமி’யின் பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் தவிக்கும் சேவைகளில் ஏடிஎம் சேவையும் ஒன்று.
இங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக 12 ஏடிஎம் மையங்கள் இயங்கி வந்தன. இவற்றில் மேடான இடத்தில் அமைந்து இருந்த 2 ஏடிஎம் மையங்கள் மட்டும் (சந்திப்பு-தச்சநல்லூர் சாலை, அண்ணா சிலை எதிரில்) வெள்ளத்தில் மூழ்காமல் தப்பி விட்டன. மற்ற 10 மையங்களும் மூழ்கி, ஏடிஎம் இயந்திரங்கள் அனைத்தும் செயல் இழந்து விட்டன. அந்த இயந்திரங்களில் இருந்த ரூபாய் நோட்டுகளும் பாழாகி ‘கூழ்’ ஆகி விட்டன.
எதிர்பாராத இந்த சேதங்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் தான். ஏதோ கொஞ்சம் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க, இந்தப்பக்கம் பாளையங்கோட்டைக்கும், அந்தப்பக்கம் நெல்லை டவுனுக்கும் ஓடவேண்டிய நிலை.
இப்படியே, ஒரு மாதம் கடந்து நேற்றோடு 34 நாட்கள் உருண்டோடி விட்டன. ஆனால் ஏடிஎம் சேவைகள் இன்னும் முழுமையாக மீட்டெடுக்கப்படவில்லை.
கண்ணம்மன் கோவில்தெரு, மீனாட்சிபுரம் பகுதிகளில் இரு தனியார் வங்கி மையங்களில் பழுதடைந்த மிஷின்களை ஓரங்கட்டி விட்டு புதிய இயந்திரங்களை ஓரிரு நாட்களுக்கு முன் நிறுவியுள்ளனர்.
அதேபோன்று ரெயில் நிலையத்திலும். இரு ஏடிஎம் மையங்களுக்கு இப்போது உயிர் வந்துள்ளது.
பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் மையங்கள் இன்னும் மூடியே கிடக்கின்றன.
தச்சநல்லூர் சாலையில் ஆவின் பாலகம் அருகே வரிசையாக உள்ள 3 மையங்களும் இன்னும் திறக்கப்படவில்லை.
உள்ளூர் மக்களுடன் வெளியூர் பக்களும் அதிக அளவில் வந்து செல்லும் இடங்கள் இவை. இங்கே ஏடிஎம் சேவைகள் ஒரு மாதத்திற்கும் மேல் முடங்கி இருப்பது சரிதானா…?
வெள்ளத்தில் பெருமளவில் மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி, கம்ப்யூட்டர் போன்றவற்றை இழந்தவர்கள் பொதுமக்கள். அதேபோல் விற்பனைப் பொருட்களை பறிகொடுத்தவர்கள், வணிகர்கள்.. அவர்கள் இழப்பை மீட்டெடுக்கத் தேவையானது, பணம். அந்த பணம் இல்லாமல் பலரும் பரிதவிக்கும் நிலையில், பணத்தில் புழங்கிக் கொண்டு இருக்கும் வங்கிகளே, இன்னும் ஏடிஎம் மையங்களுக்கு உயிரூட்டாமல் தாமதித்து வருவது நியாயம் தானா?
ஒருவேளை, இத்தனை சேதங்களை கண்கூடாக அறிந்தும், ஆய்வுக்குழுக்கள் மூலம் தெரிந்தும், தமிழ்நாடு என்ற ஒரே காரணத்திற்காக உதவ மறுத்து ‘பாராமுகம்’ காட்டும் மத்திய அரசின் அங்கமாகத் திகழ்வதால் வங்கிகளும் கண்களை இறுக மூடிக் கொண்டனவோ…?