குடியரசு தின விழாவை முன்னிட்டு டில்லியில் ஜனவரி 26-ஆம் தேதிவரை விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் விமானங்களுக்கு தரையிறங்க மற்றும் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 10.20 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தங்களின் மாற்றியமைக்கப்பட்ட விமான நேரத்தை விமான நிறுவனங்களில் தெரிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜன.26 காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை டில்லி விமான நிலையத்தில் எந்தவித விமான சேவையும் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவ விமானங்கள், எல்லை பாதுகாப்பு படை விமானங்கள், மாநில அரசின் முதல்-அமைச்சர்கள், ஆளுனர்கள் பயன்படுத்தும் விமானங்கள், ஹெலிகாப்டர்களுக்கு இந்த தடை பொருந்தாது.