பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் ஆல் ரவுண்டரான சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
சானியா மிர்சா – சோயிப் மாலிக் திருமணம் கடந்த 2010-ம் ஆண்டு இஸ்லாமிய மதப்படி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் சியால்கோட்டில் வரவேற்பு நடந்தது. இந்த இணையருக்கு 2018-ம் ஆண்டு இஷான் மிர்சா மாலிக் என்ற குழந்தை பிறந்தது. திருமணத்தில் இருந்து தம்பதிகள் துபாயில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இடையே கருத் து வேறுபாடு நிலவி வந்தது.
தற்போது, முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனாவுடனான திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதேபோல் சனா ஜாவேதும் தனது சமூக வலைதளத்தில் இந்தத் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இத்திருமண அறிவிப்பு மூலமாக சானியா மிர்சா, சோயிப் மாலிக் இருவரும் பிரிந்து விட்டதாகக் கூறப்பட்ட செய்தி உறுதியாகி இருக்கிறது.
முன்னதாக, சனியா மிர்சா சமூக வலைதள பதிவு ஒன்றில், “திருமணம் கடினமானது, விவாகரத்து கடினமானது. உங்கள் கடினமானதை தேர்வு செய்யுங்கள். உடல் பருமன் கடினமானது, சிக்கென்று இருப்பது கடினமானது, உங்கள் கடினமானதை தேர்வு செய்யுங்கள். கடனாளியாக இருப்பது கடினமானது, நிதி சார்ந்து ஒழுக்கமாக இருப்பது கடினமானது, உங்கள் கடினமானதை தேர்வு செய்யுங்கள். தொடர்பு கொள்வது கடினமானது, தொடர்பு கொள்ளாமல் இருப்பது கடினமானது, உங்கள் கடினமாதை தேர்வு செய்யுங்கள். வாழ்க்கை எளிதானது இல்லை. அது எப்போதும் கடினமானது. ஆனால் நம்முடைய கடினத்தை நாமே தேர்வு செய்யலாம். புத்திசாலித்தனமாக தேர்வு செய்யுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.