பெங்களூருவில் கட்டப்பட்ட ராமர் கோயிலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திறந்து வைத்தார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பகல் 12.30 மணியளவில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
இதே போல், அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை நடந்த இதே நாளில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் ராமர் கோயிலை திறந்து வைத்தார். மேலும், ராமர் கோயிலுடன் 33 அடி நீள அனுமன் சிலையையும் அவர் திறந்து வைத்தார். அப்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியதாவது; ஹிரண்டஹள்ளி ஸ்ரீராம கோயில் அறக்கட்டளையால் கட்டப்பட்ட சீதாராம லட்சுமண கோயில் பெங்களூரில் முக்கியமான கோயிலாக இருக்கும். 33 அடி உயரம் கொண்ட ஒற்றைக்கல் ஆஞ்சநேய சுவாமி சிலை திறக்கப்பட்டது, பின்னர் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
கடவுள் மற்றும் மதம் என்று வரும்போது எந்த அரசியலிலும் ஈடுபடவில்லை. ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சி இந்து மதத்திற்கு பெருமை சேர்ப்பது வருத்தமளிக்கிறது. என் வாழ்நாளில் நான் மதத்தை அரசியலுக்கு கொண்டு வந்ததில்லை, மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட கட்சியில் பணியாற்றி வருகிறேன். நானும் ஒரு கோயிலை திறந்து வைக்கிறேன், எந்த விடுமுறையும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். விடுமுறை அறிவிக்காத மாநில அரசு மீது பாஜக கடும் தாக்குதல் நடத்தியதுடன், சித்தராமையா தலைமையிலான அரசை ‘இந்து எதிர்ப்பு’ அரசு என்று முத்திரை குத்தியது“. இவ்வாறு சித்தராமையா கூறினார்.