கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார்(வயது 45). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். இவருடைய மனைவி ஜெமினி(40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஜெமினி மைலோடு தேவாலயத்துக்குட்பட்ட பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
மைலோடு தேவாலயத்தின் உறுப்பினர் என்ற முறையில் சேவியர் குமார் வரவு செலவுகள் தொடர்பான கணக்குகள் கேட்பது வழக்கமாக இருந்துள்ளது. அவ்வப்போது இந்த பிரச்னை குறித்து நிர்வாகம் தொடர்பாக வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கேள்வி கேட்டு பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். இதனால் ஆலய நிர்வாகம் மற்றும் பள்ளி நிர்வாகம் சேவியர் குமாரின் மனைவி ஜெமினியை சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த சேவியர் குமார் மைலோடு ஆலய வளாகத்தில் உள்ள பங்குத் தந்தை இல்லத்திற்கு 20ம் தேதி மதியம் 2.30 மணியளவில் சென்றார். அங்கு தந்தை ராபின்சன் உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்தவர்கள் சேவியர் குமாரை சரமாரியாக தாக்கி உள்ளனர். அங்கிருந்த நாற்காலி, அயர்ன் பாக்ஸ், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து தலை, வயிறு, மார்பு, முகம் பகுதியில் சரமாரியாக தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சேவியர்குமார் உயிரிழந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்ததும் சேவியர் குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் பங்குத்தந்த இல்லத்தில் குவிந்தனர். இது குறித்து அறிந்ததும் குளச்சல் ஏ.எஸ்.பி- பிரவீன் கவுதம், தக்கலை டி.எஸ்.பி -உதயசூரியன், மற்றும் இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர் அதிரடிப்படை போலீசாரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என கூறி போராட்டம் நடந்தது.
இதைய டுத்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) சிலம்பரசன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று(21ம் தேதி ) அதிகாலை 2 மணியளவில் சேவியர் குமார் உடலை எடுத்து செல்ல உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று உடல் பிரேத பரிசோதனை நடந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் மனைவி ஜெமினி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் ரமேஷ் பாபு(46), பங்குதந்தை ராபின்சன்(39),
ஜஸ்டஸ் ரோக்(58), சுரேஷ்(48), எட்வின் ஜோஸ்(40), அஜய்(36), ஆர்வின்(36), டெரிக் (24), வினோ(44), வின்சென்ட்(60), ஜெலிஸ் (40) பங்குத்தந்தை பெனிட்டா மற்றும் கண்டால் தெரியும் 2 பேர் உட்பட 15 பேர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான மேல் விசாரணைக்காக ஏ.எஸ்.பி- பிரவீன் கவுதம் மேற்பார்வையில், தக்கலை டி.எஸ்.பி- உதயசூரியன், இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர்- செந்தில்வேல் குமார், மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர்- பெருமாள், தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர்- ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு தடவியில் நிபுணர்களும் வந்து ஆய்வு செய்தனர். உடைந்து கிடந்த பொருட்களில் இருந்தும், அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றிலிருந்தும் கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த அறையில் கண்காணிப்பு கேமராக்களும் உண்டு. அந்த கேமராக்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் உள்ள ரிசீவர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.