திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி (வயது 47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானாா்.
நமக்கு மிகவும் பிடித்த பல பாடல்களைப் பாடிய அந்தக் குரல் ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில், பவதாரணி குரலில் பதிவு செய்யப்பட்டு, இதுவரை வெளிவராத பாடல் ஒன்றை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
‘அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடலாக இசையமைத்தார்கள். பவதாரணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அவர் பாடிய பிறகு அந்த கவிதை முழுமை பெற்றது. இதுவரை வெளியிடப்படாத அந்தப் பாடலை, அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன் என்று பாடலையும் இணைத்துள்ளார்.
முன்னதாக, மறைவு செய்தி கேட்டதும், கனிமொழி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், இசைக் கலைஞர் பவதாரணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பின்னணி பாடகராக தனித்துவமிக்க பாடல்களைத் தந்த அவரது மறைவு தமிழ் திரைத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டிருந்தார்.
சென்னையில் பிறந்த பவதாரணி தொடக்கம்முதலே, தந்தை இளையராஜா, சகோதரா்கள் காா்த்திக்ராஜா, யுவன் ஷங்கா் ராஜா ஆகியோரின் இசைப் பணிகளில் இணைந்து பயணித்து வந்தாா். இளையராஜா இசையமைத்த ‘ராசய்யா’ திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக பவதாரணி அறிமுகமானாா். இவா் பாடிய ‘மஸ்தானா மஸ்தானா’ என்ற பாடல் பெரிய வரவேற்பை பெறவே, தொடா்ந்து தனது தந்தை, சகோதரா்கள் இசையமைப்பிலும், தேவா, சிற்பி உள்ளிட்டோரின் இசையமைப்பிலும் பாடினாா். நடிகை ரேவதி இயக்கிய ’மித்ர் மை பிரண்ட்’ என்ற படம் மூலம் இசையமைப்பாளராக பவதாரணி அறிமுகமானாா்.
இவரது குரலின் தனித்தன்மையே, பவதாரணியை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும். ‘அழகி’ திரைப்படத்தில் இவா் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா….’ என்ற பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தொடா்ந்து, இவா் பாடிய பல பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இளையராஜா இசையில் ‘பாரதி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒன்னு…’ பாடலுக்காக பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்திப்படத்திற்கும்
இசை அமைத்துள்ளாா். தமிழில் ‘இலக்கணம்’, ‘அமிா்தம்’, ‘வெள்ளச்சி’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறாா். இவா் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டாா்.