கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாட்கள் பரபரப்பை ஏற்படுத்திய சேவியர் குமாரின் கொலைக்கான காரணம் வெளியானது. அவர் வாட்ஸ் அப் குழுவில் என்னென்ன தகவல்களை பகிர்ந்தார். அதில் யார், யார் உள்ளனர். என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.
திங்கள் சந்தை அருகே மைலோடு தேவாலய பங்குத்தந்தை அலுவலகத்தில் கடந்த 20 ம் தேதி பங்கு பேரவை உறுப்பினராக இருந்த சேவியர் குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி ஜெமினி இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கறிஞர் ரமேஷ்பாபு(46), பங்குத்தந்தை ராபின்சன்(34), பங்கு பேரவை துணை தலைவர் ஜஸ்டஸ் ரோக்(58) உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராபின்சன் திருச்செந்தூர் கோர்ட்டில் சரணடைந்த நிலையில் அவரை போலீசார் பாளை சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட சேவியர் குமார் நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார்.
இதனால் சேவியர் குமாரின் உடலை ஆலய வளாகத்தில் அடக்கம் செய்ய வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆனால், இதனை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கல்லறை தோட்டத்தில் தான் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு சேவியர் குமாரின் குடும்பத்தினர் மறுத்தனர்.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்சூழ்நிலை, உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சேவியர் குமாரின் உடல் நேற்று முன்தினம் மாலை பத்மநாபபுரம் ஆர்டிஓ (பொறுப்பு) லொரீட்டா தலைமையில் கல்குளம் தாசில்தார்- கண்ணன் முன்னிலையில் மைலோடு ஆலயத்திற்குட்பட்ட கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் 3 நாட்கள் இருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் சேவியர் குமாரின் உயிரை காவு வாங்கியதற்கு வாட்ஸ் அப் குரூப் தான் முதன்மை காரணம் என போலீசார் தெரிவித்தனர். அதாவது குழித்துறை மறை மாவட்டம் என்ற ஒரு வாட்ஸ் அப் குழுவை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சேவியர் குமார் தொடங்கி உள்ளார்.
இதில் அந்தப் பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டு அட்மின் ஆகவும் இருந்துள்ளனர். இந்தத் தளத்தில் தான் மைலோடு பங்கு குறித்த அவதூறு பதிவுகள் அதிக அளவில் பதிவிடப்பட்டதாம். இந்த பதிவுகள் அதே குழுவில் இருந்த சிலருக்கும் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சமூகப் பிரச்சினை தான் தற்போது கொலையில் முடிவடைய காரணமாகி உள்ளது. எனவே சைபர் கிரைம் போலீசார் இந்த வாட்ஸ் அப் குழுவில் யார், யார் உள்ளனர். எந்த, எந்த விபரங்கள் பதிவிடப்பட்டது என்பது குறித்து, ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.