தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு கிராமத்தைச் சேர்ந்த பொன்பாண்டி மகன் அந்தோணிராஜ் (வயது 28). இவர், நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணி கோயில்ராஜ் மகள் ஜான்சிராணி கீதா (27) என்பவரை கடந்த 8ஆண்டுகளுக்கு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து இருவரும் நாசரேத் அருகே உள்ள தைலாபுரத்தில் வசிதது வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 21ஆம்தேதி அந்தோணிராஜ், ஜான்சிராணி கீதா தம்பதியினர் அவர்களது குழந்தையை ஜான்சிராணி பெற்றோர் வீட்டில் விட்டு வந்துள்ளனர்.
அன்றிரவு அந்தோணிராஜ் தைலாபுரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸார் விசாரித்தனர். அப்போது மகள் ஜான்சிராணி கீதா அங்கு இல்லாததால் தந்தை கோயில்ராஜ் நாசரேத் காவல் நிலையத்தில் கடந்த 22ஆம்தேதி புகார் செய்தார். புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்கபதிவுசெய்து விசாரித்து வந்தனர்.
இதனையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் உத்தரவின் பேரில் தனிப் பிரிவு புலனாய்வு எஸ். ஐ டேவிட் கிறிஸ்துராஜ் தலைமையில் போலீசார் மாயமான ஜான்சிராணி கீதாவை தேடி வந்தனர். இதனையடுத்து தைலாபுரத்தில் இருந்து சாத்தான்குளம் வரை தனிநபர் வீடு மற்றும் கடை, களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் கண்காணித்தபோது அந்தோணிராஜ், ஜான்சிராணி கீதா ஆகிய இருவரும் ஒரே பைக்கில் சாத்தான்குளம் பகுதிக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கேமராவில் பார்த்தபோது அவர்கள் அதே பகுதியில் உள்ள தேரி காட்டுப்பகுதியில் சென்றது தெரியவந்ததையடுத்து போலீசார் வெள்ளிக்கிழமை அங்கு சென்று பார்த்தபோது அங்கு ஜான்சிராணிகீதா அழுகிய நிலையில் துப்பாடாவை கொண்டு கழுத்தை இறுக்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தூத்துக்குடியில் இருந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தினர்.
சம்பவ இடத்தை சாத்தான்குளம் டிஎஸ்பி அருள், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அந்தோணிராஜ், மனைவி ஜான்சிராணிகீதாவை கொலை செய்து காட்டு பகுதியில் போட்டுவிட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும், குடும்ப பிரச்னையா அல்லது வேறு காரணமா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.