திருச்சி மாவட்டம், சிறுகனுாரில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது.
அம்மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க., அம்பேத்கரை உயர்த்தி பிடிக்கும் இயக்கம். அவரை போற்றும் பட்டியலின மக்களை காக்கும் அரசு தி.மு.க., அம்பேத்கர் பிறந்தநாளை, சமத்துவ நாளாக அறிவித்தோம். ஆதி திராவிடர், பழங்குடியின ஆணையத்தை புதுப்பித்து, கூட்டங்களை நடத்தி வருகிறோம். சென்னையில் அயோத்திதாசருக்கு சிலை அமைத்திருக்கிறோம்.
வி.சி.,க்கள் மாநாடு வாயிலாக, ‘வெல்லும் ஜனநாயகம் என்று சொன்னால் மட்டும் போதாது. நாம் அனைவரும் இணைந்து, சர்வாதிகார பா.ஜ., ஆட்சியை துாக்கி எறிய வேண்டும். மத்தியில் ஜனநாயக அரசை கொண்டு வர சபதம் ஏற்றுள்ளோம்.
இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்றும் கடமை நமக்குள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் தனித்தனி அதிகாரம் பெற்றவை என அம்பேத்கர் கூறியிருக்கிறார்.
மாகாணங்களில் தேசிய பண்பு மலர, சுதந்திரமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சொல்லியுள்ளார். இத்தகைய எண்ணம் கொண்ட மத்திய அரசைத்தான் உருவாக்கவேண்டும். அதன் துவக்கமாக பா.ஜ., ஆட்சி அகற்றப்படவேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ., பூஜ்ஜியம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் மட்டும் பா.ஜ.,வை வீழ்த்தினால் போதாது. அகில இந்திய அளவில் வீழ்த்த வேண்டும். அதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் இந்தியா கூட்டணி.
இந்தியாவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற, பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அப்படி வந்து விட்டால், இந்தியாவில் கூட்டாட்சி அமைப்பு இருக்காது; ஜனநாயகம் இருக்காது; மாநிலங்கள் இருக்காது.
மாநிலங்களை மாநகராட்சிகளாக மாற்றி விடுவர். ஜம்மு – காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்கியது போல், யூனியன் பிரதேசங்களாக மாற்றி விடுவர். இதுதான் பா.ஜ., செயல்படுத்தும் சர்வாதிகாரம். அந்த நிலைதான் எல்லா மாநிலங்களுக்கும் ஏற்படும்.
கேள்விகள் இல்லாத பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடத்தப்பட்டுள்ளது. 140 எம்.பி.,க்கள் ‘சஸ்பெண்ட்’ என்பது, உலகின் பெரிய ஜனநாயக நாட்டுக்கு அவமானம். ‘இண்டியா’ கூட்டணி அமைத்தனர்; ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பது வரலாறாக இருக்கவேண்டும்.
சண்டிகர் மாநகர மேயர் தேர்தல்
நடக்க இருந்தது. பா.ஜ.,வுக்கு, 15 உறுப்பினர்கள், ஆம் ஆத்மி கட்சிக்கு, 13 பேர், காங்., கட்சிக்கு, ஏழு உறுப்பினர்கள் இருந்தனர். மேயர் பதவியை இந்தியா கூட்டணி கைப்பற்றும் நிலை உருவானது. இதனால் பா.ஜ., தேர்தலை ரத்து செய்துவிட்டது. இத்தகைய சர்வாதிகார போக்கிற்கு முடிவு கட்டவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.