நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் அமைச்சரும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார். தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை. கடந்த 13-ம் தேதி டில்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமாரை தேர்வு செய்யலாம் என அனைத்துக் கட்சிகளும் சொன்ன நிலையில் ராகுல் அதை நிராகரித்தார்.
இது தனக்கு ஏற்பட்ட அவமதிப்பாக நிதிஷ்குமார் கருதினார். இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவு செய்தார். மேலும் கடந்த 2 ஆண்டாக ஆதரவு பெற்று வந்த லல்லு பிரசாத் யாதவ் கட்சியுடனான தொடர்பை துண்டிக்கவும் தீர்மானித்தார். அதே சமயத்தில் மீண்டும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல் அமைச்சர் பதவியை தொடரவும் திட்டமிட்டார். இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக பீகார் அரசியலில் கடுமையான பரபரப்பு நிலவியது. நிதிஷ்குமாரை சமரசம் செய்ய காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இது இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு கடிதமும் வழங்கினர். அப்போது அவர் தற்போதைய முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார். அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைப்பதாகக் கூறி கடிதங்களைக் கொடுத்தார். அதையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நிதிஷ்குமார் 9-வது முறையாக பீகார் முதல் அமைச்சராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. மாலை நிதிஷ்குமார் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.