நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார். தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை. இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை.
அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், நேற்று மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல் அமைச்சராக பதவி ஏற்றார். இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறியதாவது, “பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளையும் பாட்னாவுக்கு அழைத்தது நிதிஷ் குமார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவரது செயலும் பாஜக-வுக்கு எதிராகதான் இருந்தது. ஆனால் கடந்த 10-15 நாட்களில் தனது சித்தாந்தத்தை விட்டு வெளியேறி, தற்போது பா.ஜ.க-வில் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார். மக்கள் நிச்சயம் அவருக்கு பாடம் புகட்டுவார்” எனத் தெரிவித்தார்.