தமிழ்நாட்டில் மேலும் இரு பறவைகள் காப்பகத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள லாங்வுட் சோலை, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் காப்பகம் என மேலும் இரு இடங்கள் தமிழ்நாட்டில் இருந்து ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
நமது திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின், 2022-ஆம் ஆண்டில் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து 13 இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவிலேயே அதிகமாக 16 ராம்சர் தலங்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் தொடர்ந்து செலுத்தி வரும் அக்கறைக்கான சான்றாக இச்சாதனை விளங்குகிறது.
தமிழ்நாடு இத்தகைய உலக அங்கீகாரம் பெற உழைத்த அமைச்சர் மதிவேந்தன், செயலர் சுப்ரியா சாஹு முதலிய அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.