கடலுக்குள் மண்அரிப்பை செயற்கை பவளப்பாறைகள் தடுத்து வருவதால், தூத்துக்குடி வான்தீவு நிலப்பரப்பு 3.79 எக்டேர் அளவாகஅதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள வான் தீவு பகுதியில் வனம் மற்றும் பருவநிலை மாற்ற துறையின் காலநிலை மாற்றத்திற்கான தேசிய தழுவல் நிதி, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேம்பாட்டு நிதி, மத்திய சுற்றுசூழல், நபார்டு வங்கி, தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்ற துறை மற்றும் தமிழ்நாடு வனத்துறை இணைந்து வான் தீவைப் பாதுகாக்கவும், தீவைச் சார்ந்துள்ள உயிர் பல்வகைமையைப் பாதுகாக்கவும், மற்றும் மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுதும் வகையில் வான் தீவைச் சுற்றிலும் பல்வேறு நன்மைகளைத் தரும் செயற்கைப் பவளப்பறைகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் சங்கர நாராயணன் தலைமையில் சுமார் 30 அதிகாரிகள் வான் தீவைப் பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து நபார்டு வங்கிக் குழுவினர் கூறியதாவது:-
வான்தீவு மன்னார் வளைகுடாவிலுள்ள 21 தீவுகளில் ஒன்றாகும். கடந்த 1969-ம் ஆண்டு இந்திய வரைபடத்தின்படி வான் தீவின் நிலப்பரப்பு சுமார் 20.08 எக்டேர் ஆகும்.
இத்தீவில் உள்ள பவளப்பாறைகளின் அளவு தொடர்ச்சியாக குறைந்ததால் கடந்த 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தத் தீவின் அளவு வெறும் 2.3 எக்டேர் அளவு மட்டுமே இருந்தது. மேலும் நிலப்பரப்பும் குறைந்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக, வான் தீவைச் சுற்றிலும் பல்வேறு நன்மைகளை தரும் செயற்கைப் பவளப்பறைகள் அமைக்கும் திட்டம் தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையம் மூலம் செயல்படுத்தப்பட்டது.
இதில் சென்னை ஐ.ஐ.டி. முந்தைய செயற்கை பவளப்பாறை திட்டங்களில் உபயோகப்படுத்திய மாதிரியைப் பயன்படுத்தி ஒரு புதிய மாதிரியை உருவாக்கியது. மண் அரிப்பை தடுக்கும் வகையில் மொத்தம் 10 ஆயிரத்து 600 செயற்கைப் பவளப்பாறைகள் வான் தீவை சுற்றிலும் இடப்பட்டன. இந்த செயற்கைப் பவளப்பாறைகள் தீவுக்கரையில் மோதும் அலைகளின் வேகத்தை குறைத்து மண் அரிப்பில் இருந்து தீவை பாதுகாக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் இவை பவளப்பாறைகள், கடல் பாசிகள், கடற்பஞ்சுகள், கடல் விசிறிகள் போன்ற அரிய உயிரிகள் ஒட்டி வளரும் ஆதாரமாக உதவி செய்து ஒரு இயற்கைழி வாழிடத்தை உருவாக்குவதோடு உயிர் பல்வகைமையைப் பெருக்குகின்றன. செயற்கைப் பவளப்பாறைகள் தீவில் மண் சேரவும், தீவின் அளவு அதிகரிக்கவும் உதவின.
தற்போது இந்த தீவின் அளவு அதிகரித்து சுமார் 3.79 எக்டேர் அளவாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதில், நபார்டு வங்கியின் பொது மேலாளர்கள் மற்றும் மாவட்ட வளர்ச்சி மேலாளர்கள், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ஜே.கே.பேட்டர்சன் எட்வர்டு மற்றும் அந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை வனச்சரகர் ஜீனோ பிளெஸ்ஸில் மற்றும் வனத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.