நடராசா லோகதயாளன்
இலங்கையில் சீனாவின் ஆளுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது என்பது புதிய செய்தி அல்ல. ஆனால், அண்மைக் காலத்தில் அது மேலும் அதிகரித்து வருவது-அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் சீனா மற்றும் அதன் சார்பு அமைப்புகள் தமது நடவடிக்கைகளை அதிகரித்து வருவது கவலையளிக்கும் விடயம் என்று பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அவ்வகையில் சீனாவின் உதவிகளை மக்கள் விடுதலை முன்னணி (ஜே வி பி) வடக்கில் வழங்கியுள்ளது. கடந்த விழாயக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தில் 150 குடும்பங்களிற்கு சீனாவின் நிவாரணப் பொதிகள் அன்பளிப்பாக அளிக்கப்பட்டுள்ளன. சீனாவின் நிவாரணப் பொதிகளை பயணாளிகளிற்கு ஜே.வி.பி அரசியல் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் வழங்கி வைத்தார்.
இதனை வழங்கி வைத்து உரையாற்றிய சந்திரசேகரன் ”எதிர் வரும் ஒக்டோபர் மாதம் உருவாகவுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு சீனா, இந்தியா உட்பட அனைவரும் உதவ முன்வந்துள்ளனர். எமது ஆட்சியில் சீனா,இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளோடு சமாந்தர நிலையில் உறவுகளைப் பேணி இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுப்போம். ஒருவரை அரவணைத்து மற்றவரை புறந்தள்ளும் வேலை கிடையாது” என்றார்.