திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் (பொருட்காட்சித்திடல்) மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்-பதிப்பாளர் சங்கம் (பபாசி) ஆகியோர் இணைந்து நடத்தும், 7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா இன்று (பிப் 3) தொடங்கியது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார். சாகித்ய அகாடமி விருதாளர் சோ.தர்மன் , பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் , திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் , திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், துணை மேயர் கே.ஆர்.ராஜூ , மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.மாலைராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-
முத்தமிழறிஞர் கலைஞர் புத்தகங்கள் வாசிப்பதற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தவர். முன்னாள் தலைவர்களான பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் மற்றும் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆகியோர் முன்னெடுத்த முயற்சியால் பல பெண்கள் படித்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் கல்விக்காக அயராது பாடுப்பட்ட தலைவர்கள் இவர்கள்.
நமக்கு விஞ்ஞான வளர்ச்சி எளிதாக கிடைக்கவில்லை உங்களை போன்று படிக்கின்ற காலத்தில் நன்றாக புரிந்து படித்து விஞ்ஞானியாக உருவாகி பல விஞ்ஞான வளர்ச்சியை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் விஞ்ஞானிகள் அதிகமானோர் உள்ளார்கள். விஞ்ஞான வளர்ச்சிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிகமாக உதவியுள்ளார்கள். விஞ்ஞானிகள் பெரிய அளவிற்கு வருவதற்கு காரணபே அவர்கள் புத்தகம் படித்ததன் காரணமே ஆகும். அதனால் படிக்கின்ற மாணவ, மாணவியர்கள் நாம் அனைவரும் புத்தகம் வாசிப்பதை பழக்க வழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.
படிக்கின்ற மாணவ,மாணவியர் வாழ்வில் பெரிய உயர் பதவிகளை அடையவேண்டும் என்பதற்காகவே ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எழுத்தாளர்களையும், படைப்பாளிகளையும் ஊக்கப்படுத்தியதே பதிப்பாளர்களும், விற்பனையாளர்களும் தான் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் முதன்முதலாக புத்தகத் திருவிழாவினை ஆரம்பித்து மிகச்சிறப்பாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பெருமை அவர்களுக்கு உண்டு. அந்த அமைப்பு பபாசி அமைப்பு.
இந்த புத்தகத் திருவிழாவினை தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்த பபாசி அமைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் முதன்முதவாக ஜெர்மனியில் புத்தகத் திருவிழா தொடங்கி நடை பெற்றது. அதனால்தான் ஜெர்மனி மிகபெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. உலகின் பெரிய புத்தகத் கண்காட்சி உள்ள முதல் இடம் ஜெர்மனி, இரண்டாம் இடம் லண்டன், மூன்றாம் இடம் இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளம் ஆகும்.
தொடர்ந்து 47 ஆண்டு காலம் புத்தகத் கண்காட்சி நடைபெற்று கொண்டிருப்பதனால் தான் நமது மாணவு, மாணவியர்கள் நன்றாக படிக்க வைக்கிறது, சிந்திக்க வைக்கிறது. எழுத வைக்கிறது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் ஆகியோரு க்கு தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் பல விருதுகளை கொடுத்துள்ளன .
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் ஆகியோர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். கடந்த காலங்களில் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் உள்ள எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்களை கண்டறிந்து அவர்களுடைய நிலையை ஆராய்ந்து, படைப்பாளிகள் எழுதிய புத்தகங்களை தமிழ்நாடு அரசு பெற்றுகொண்டு நூலகங்களுக்கு வழங்கி நிதியுதவி செய்து சிறப்பு சேர்த்துள்ளது. படைப்பாளிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு பெருமை சேர்த்துள்ளது.
மேலும், தமிழ்மொழிக்கு ஒப்பிலக்கணம் தந்தவர் தமிழறிஞர் பிஷப் கால்டுவெல் ஆவார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை பெற்று தந்தவர். அனைவரும் புத்தகங்கள் வாசிக்கின்ற பழக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.
முன்னதாக 7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா அரங்குகளை சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு திறந்து வைத்தார். இந்த புத்தகத் திருவிழாவில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இயற்கை உணவு, வாசிப்பு மற்றும் நூல் திறனாய்வு அரங்கம், இதழியல் பயிற்சி பட்டறை, கைவினைப் பொருட்கள் பயிற்சி பட்டறை, மகளிர் சுயஉதவிகுழுக்கள் மூலம் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் சுழல் அரங்கம், இயற்கை நெல் கண்காட்சி, மற்றும் சிறுதானிய உணவு வகைகள், சிறுவர்களுக்கான வினையாட்டு அரங்குகள் போன்ற பல்வேறு அம்சங்களுடன் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன .
03.02.2024 தொடங்கிய புத்தகத் திருவிழா 13.02.2024 வரை 11 நாட்கள்நடைபெறவுள்ளது.