நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. பாரதிய ஜனதா கட்சி மிக விரைவில் அதிரடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விடும் என்று டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்தடுத்து அதிரடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கூட்டணி தேர்வு என தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு அனைத்து விவகாரங்களிலும் பாரதிய ஜனதா ரகசியத்தை கடைபிடிக்கிறது. தமிழகத்திலும் பாரதிய ஜனதாவின் வளர்ச்சியும், எழுச்சியும் பிரமிக்க தக்க வகையில் உள்ளது. அதே சமயத்தில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் நிலைமை நாளுக்கு நாள் பரிதாபமாக மாறிக் கொண்டு இருக்கிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்பட 28 கட்சிகள் இருந்தன.
திடீரென ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் அந்தர் பல்டி அடித்து இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கூட்டணிக்கு போய்விட்டார். இது இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாகும். அடுத்து இந்தியா கூட்டணியில் இதுவரை ஒரு மாநிலத்தில் கூட சுமூகமான தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி காங்கிரசை மிரள வைத்துக் கொண்டே இருக்கிறார். இரண்டே இரண்டு தொகுதிதான் தருவேன் என்ற அவர் தனது பிடி வாதத்தை இன்றுவரை தளர்த்தவில்லை. காங்கிரஸ் ஒத்துவராவிட்டால் திரிணா முல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அவர் உறுதியாக இருக்கிறார். உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் காங்கிரசை அலற வைத்துள்ளார்.
மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் வெறும் 11 தொகுதி தான் காங்கிரசுக்கு தரப்படும் என்று அவர் அறிவித்தார். அவரை காங்கிரசார் சமரசம் செய்து கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் மனம் இரங்கி இருக்கும் அகிலேஷ் யாதவ் இறுதியில் 15 முதல் 20 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் ஓரளவு தொகுதிகளை காங்கிரசுக்கு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மராட்டியத்தில் சிவசேனாவுக்கும், தேசியவாத காங்கிரசுக்கும் போக மிச்சம் இருக்கும் இடங்கள் தான் காங்கிரசுக்கு கிடைக்கும். டில்லியிலும், பஞ்சாபிலும் ஆம்ஆத்மி கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த கட்சி காங்கிரசுக்கு அதிக இடங்கள் தர இயலாது என்று திட்டவட்டமாக கூறி உள்ளது.
இதனால் தலைநகரிலும் காங்கிரஸ் சரியான பிடிமானம் இல்லாமல் தவிக்கிறது. அதுபோல வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரசுக்கு தோழமை கட்சிகள் சாதகமாக இல்லை. விதிவிலக்காக தமிழகத்தில் மட்டும் தி.மு.க. சற்று பெருந்தன்மையுடன் காங்கிரசை நடத்துகிறது. கடந்த தடவை போல 9 தொகுதிகளை காங்கிரஸ் மீண்டும் கேட்கிறது. தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிட உறுதியாக முடிவு செய்தால் காங்கிரசுக்கு 7 தொகுதிகள்தான் கிடைக்கும் என்கிறார்கள். இந்த நிலையில் மற்ற எந்த மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஒருமித்த நிலை இல்லை. இதன் காரணமாக இந்தியா கூட்டணி இடியாப்ப சிக்கலில் உள்ளது. கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஒடிசா உள்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது.