நடிகர் தனுஷின் 51வது திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நிறைவு பெற்றதையடுத்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு கோவா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட் திரையில் அறிமுகமாகி ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் அண்மையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து நடிகர் தனுஷே இயக்கி, நடிக்கும் அவரது 50வது படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து தனுஷ் நடிக்கும் 51-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17-ம் தேதி பூஜையுடன் துவங்கியது. இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் சேகர் கம்மூலா இயக்குகிறார். மேலும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. தனுஷ் 51 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் திருப்பதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து நடிகர் தனுஷ் தனது கையில் படங்களை வைத்திருப்பதால், அவரை வித்தியாசமான கதைக்களங்களில், தோற்றத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.