டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17-ந் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகார் மீதான விசாரணையில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது.
ஆனால், சம்மனை வாங்க மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம் என தெரிவித்து சம்மனை திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், மூன்றாவது முறையாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்தது. டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு பிப். 3 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி திவ்யா மல்கோத்ரா முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அமலாக்கத்துறை விசாரணையை புறக்கணித்தது ஏன்? என்பது பற்றி அப்போது விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.