சென்னையை அடுத்த தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் நேற்று ஒரு குண்டு கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 குண்டுகள் தற்போது காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தியாகராஜன். நேற்று மாலை இவரது வீட்டு ஜன்னலில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீட்டின் முதல் தளத்தில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. இந்த சம்பவத்தைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் தாம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் தாம்பரம் காவல் துணை ஆணையர் தலைமையிலான காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர். மேலும், அந்த பகுதியில் தடய அறிவியல் நிபுணர்களும் துப்பாக்கி குண்டை கைப்பற்றி நிலையில், தீவிர விசாரணையை நடத்தினர். இந்நிலையில், வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், காந்தி சாலை பகுதியில் மேலும் 6 குண்டுகள் சிதறி கிடந்ததை காவல்துறை கண்டறிந்தனர். இதையடுத்து, காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு தாம்பரத்தில் உள்ள விமானப்படை வீரர்களுக்கான பயிற்சி நிலையத்திலிருந்து பயிற்சி போது குண்டுகள் வந்திருக்கலாம் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், கிழக்கு தாம்பரத்தில் உள்ள விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் இடத்திற்கு சென்று துப்பாக்கி குண்டு சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர். குண்டுகள் குறித்து துப்பு கிடைக்காதால் தொடர் விசாரணையில் காவல்துறை ஈடுபட்டுள்ளனர். மேலும் சில குண்டுகள் கிடைக்கலாம் என்பதால் காவல்துறை சுற்று வட்டாரத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.