கேரளா அரசு முதியோர் மற்றும் கை பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1600 ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 5 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை. இதனை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டயத்தை சார்ந்த 80 வயதான ஒரு மூதாட்டி ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினார்.
இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியைச் சேர்ந்த 90 வயதான பொன்னம்மா என்ற மூதாட்டி 6ம் தேதி) சாலை மறியல் போராட்டம் நடத்தினார். மாலை இவர் தன்னுடைய வீட்டுக்கு அருகே உள்ள வண்டி பெரியார்- வள்ளக்கடவு ரோட்டில் ஒரு நாற்காலி போட்டு அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
இதனால் அந்த வழியாக போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து அறிந்ததும் வண்டிப்பெரியார் போலீசார் விரைந்து சென்று பொன்னம்மாவிடமும் அவரது மகன் மாயனிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தனக்கு கிடைத்து வந்த ஓய்வூதியத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்தி வருவதாகவும், கடந்து 5 மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்காததால் பெரும் சிரமப்பட்டு வருவதாகவும் பொன்னம்மா போலீசாரிடம் கூறினார். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்திற்கு பின் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்று அங்கிருந்து எழுந்து சென்றார்.