தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக உதகை சென்ற நிலையில், தோடர் பழங்குடியின ஆண்களுடன் பாரம்பரிய நடனமாடினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக உதகை சென்றடைந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை வழியாக உதகை ராஜ்பவன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து, உதகை அருகே உள்ள தோடர் பழங்குடியின மக்கள் வாழும் முத்தநாடு மந்துவிற்கு சென்று, அங்கு வாழக்கூடிய தோடர் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பழங்குடியின மக்களின் பண்பாடு, பாரம்பரிய கலாச்சாரம், வாழ்க்கை முறை, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றை கேட்டறிந்தார். பின்னர் தோடர் இன மக்களின் குலதெய்வமான தேக்கிஸ் அம்மன் கோயிலில் தனது துணைவியாருடன் வழிபட்டார். பின்பு அவர் தோடர் இன ஆண்களுடன் பாரம்பரிய நடனமாடினார். தொடர்ந்து தோடர் பழங்குடியின கிராமத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கோயில்களை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து மீண்டும் ராஜ்பவன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ஆளுநரின் வருகையையொட்டி நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.