முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் திரைப்பட விருது வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி அவரது பெயரில் திரைப்பட விருது இல்லை என மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் திரைப்படைத் துறையை ஊக்குவிக்கும் வகையில் 1954 முதல் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 1965 முதல் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த படத்திற்கு நர்கிஸ் தத் விருதும், 1984 முதல் சிறந்த அறிமுக இயக்குநருக்கு இந்திராகாந்தி விருதும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள 70வது தேசிய திரைப்பட விருதுகளில் இந்த இரு விருதுகளின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. நர்கிஸ் தத் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்லாது சமூக சேவகியும் ஆவார்.
இவரது கணவரும் நடிகருமான சுனில் தத், காங்கிரஸ் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தார். இவரது மகன் சஞ்சய் தத். தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான படங்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது. இந்திரா காந்தியின் பெயர் நீக்கம் என்பதை அரசியல்ரீதியாக எடுத்துக் கொண்டாலும், நர்கிஸ் தத்தின் பெயர் நீக்கம் ஏன் என்ற கேள்வி திரைத்துறையில் எழுந்துள்ளது. இதற்கிடையே, தேசிய திரைப்பட விருதுகளை வெல்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத் தொகை இந்த ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.