நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இன்னும் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை ‘சீட்’ என்பதும் முடிவாகவில்லை. தி.மு.க. கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளுமே கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் தேசிய அளவிலான பிரதான கட்சியாக இருப்பதால் கூடுதலான எம்.பி.க்களை கைப்பற்ற வேண்டும் என்று விரும்புகிறது. வடமாநிலங்களில் காங்கிரசுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே கூட்டணி கட்சிகள் தொகுதிகளை ஒதுக்கி உள்ளன. இந்த நிலையில் காங்கிரசுக்கு நம்பிக்கை கொடுத்து வரும் தி.மு.க.வும் தொகுதிகளில் கை வைக்குமோ என்ற அச்சம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய்குமார் ஆகியோர் அண்ணா அறிவாலயத்துக்கு சென்று டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் பேசினார்கள்.
அப்போது 15 தொகுதிகள் பட்டியலை கொடுத்து 12 தொகுதிகள் குறைய கூடாது என்று வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் 5 தொகுதிகள்தான் தர இயலும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்ய முடியாமல் பேச்சுவார்த்தை முடிந்தது. ஆனால் டில்லி காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது. தி.மு.க. தரப்பில் தங்கள் நிலைப்பாட்டை விளக்கி இருக்கிறார்கள். ஏற்கனவே டி.ஆர்.பாலு முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போதே காங்கிரசுக்கு குறைவான தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என்பதையும் அதற்கான காரணத்தையும் விளக்கமாக தெரிவித்துள்ளார்.
அந்த தகவலை சிதம்பரமும் கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துவிட்டார். எனவே ஒன்றிரண்டு தொகுதிகள் குறைந்தாலும் பரவாயில்லை என்று காங்கிரஸ் தரப்பில் இறங்கி வந்ததாக கூறுகிறார்கள். அதன்பிறகு ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளை மாற்றிவிட்டு புதிய தொகுதிகளை கொடுக்கவே தி.மு.க. விரும்புகிறது. எதுவானாலும் பேசி முடிவு செய்யலாம் என்ற அளவுக்கு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளது. வருகிற 18-ந்தேதி மீண்டும் பேசலாம் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை. இதனால் காங்கிரஸ் கலக்கத்தில் உள்ளது.