டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பண மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராக கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடும்படி டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.
இவ்வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு டில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவாலின் வக்கீல் நீதிபதியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகுவதில் விலக்கு அளிக்க கோரினார். இதை நீதிபதி ஏற்று கொண்டதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால், காணொலி கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, “நான் நேரில் ஆஜராக விரும்பியதாகவும் ஆனால் சட்டசபையில் பட்ஜெட் அமர்வு மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் இருப்பதால் நேரில் வர இயலவில்லை என்றும் வேறு ஒரு தேதி கொடுக்கப்பட்டால் ஆஜராகுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 16-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.