தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது;
பாஜக கூட்டணிக்கு செல்லும் கட்சிகள் அழிந்துபோகும். தென்மாநிலங்களில் உள்ள கட்சிகளுடன் நட்பு பாராட்டிய பாஜக, ஆட்சி அமைத்தவுடன் அவர்கள் முதுகில் குத்திவிட்டதாக புகார் அளிக்கின்றனர். பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டோம்.
தமிழர்களையும் திராவிடத்தையும் ஒழிக்க வேண்டும் என மோடி, அமித் ஷா நினைக்கின்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்த தப்புக்கணக்கு போடுகிறார்.
எங்கள் கோரிக்கைகளை டெல்லியில் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஏற்கவில்லை. மோடியை எதிர்ப்பதில் எடப்பாடி உறுதியுடன் உள்ளார்; மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அமித் ஷா கூறியது அவர் கனவுலகில் மிதப்பதாகத் தெரிகிறது. நயவஞ்சக கொள்கைக்கு சொந்தக்காரர்கள் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பாஜக.
தமிழ்நாட்டு மக்கள் மனதில் பாஜகவுக்கு துளியும் இடமில்லை. ஓபிஎஸ், சசிகலா, தினகரனுடன் பாஜக கூட்டணி அமைத்தால் அது செல்லாக்காசுகள் ஒன்றானது போலத்தான் இருக்கும். தமிழ்நாடு தொடர்பான அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வைத்த கோரிக்கையை அவர்கள் ஏற்கவில்லை.
இவ்வாறு கூறிய பொன்னையன், எடப்பாடி பிரதமராக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.