சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. மகத்தான இத்திட்டத்தை பல்வேறு மாநிலங்களிலுள்ள மகளிரும் பயன்பெறும் வகையில், எதிர்காலத்தில் இந்த நாடே பின்பற்றும் என்று நம்புகிறோம். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்துக்காக இந்த ஆண்டு 13,720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
* மூவலூர் ராமமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், உயர் கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 34 சதவீதமாக அதிகரித்து, 34,460 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த புதுமைப் பெண் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்படும். இந்த ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து 30,992 அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மேலும் சுமார் 2.50 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.
விடியல் பயணத் திட்டம், மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் திருநங்கையர் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்
தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 40-லிருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினமும் சராசரியாக 50 லட்சம் மகளிர் பயணம் செய்து, ஜனவரி 2024 நிலவரப்படி, பேருந்துகளில் மகளிர் 444 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டும். மகளிரின் பேராதரவு பெற்ற இத்திட்டத்துக்கான மானியத்தொகையாக 3,050 கோடி ரூபாயை 2024-25-ஆம் ஆண்டின் வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது.
*உயர் கல்வியைத் தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும். திருநங்கைகள் நல வாரியம் மூலம் நடைமுறைப்படுத்தவிருக்கும் இத்திட்டத்துக்காக இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் கூடுதலாக அரசால் வழங்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.