தலைநகர் டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளும் தற்போது பாஜக வசம் உள்ளன. இங்கு இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தாமதமாகி வருவதாகவும், ஓரிரு நாளில் முடிவடைந்து விடும் என முதல்வர் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
தற்போது இரு கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி, வடமேற்கு டெல்லி மற்றும் புது டெல்லி ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மியும், சாந்தினி சவுக், கிழக்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியை தொடர்ந்து குஜராத், கோவா, சண்டிகர், அரியானா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸோடு தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல் மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ்-காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 42ல் காங்கிரசுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க திரிணாமுல் முன்வந்துள்ளது. இவற்றோடு, உ.பி. மற்றும் ம.பி.யில் சமாஜ்வாதியோடு உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 8 மாநிலங்களில் காங்கிரஸ்… அதாவது இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாட்டை எட்டுகிறது.