டில்லி மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடும் என கூறினார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க உள்ளன. எனினும், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் பல இடங்களில் தொய்வு ஏற்பட்டு இருந்தது. இதேபோன்று டில்லியிலும் காங்கிரஸ் மற்றும் ஆளும் ஆம் ஆத்மி இடையே சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் டில்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் மற்றும் எம்.பி.யான முகுல் வாஸ்னிக் கூறும்போது, டில்லி மக்களவைக்கு 7 தொகுதிகள் உள்ளன. இதில், ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடும் என கூறினார். இதன்படி, ஆம் ஆத்மி கட்சியானது டில்லி, மேற்கு டில்லி, தெற்கு டில்லி மற்றும் கிழக்கு டில்லி என 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியானது சாந்தினி சவுக், வடகிழக்கு மற்றும் வடமேற்கு என 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன என கூறியுள்ளார். குஜராத்தில் மொத்தம் 26 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகள் போட்டியிடுவது என்றும் ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள் என்றும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், பிற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது. கோவாவில் காங்கிரஸ் கட்சியே மொத்தம் உள்ள 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. சண்டிகரில் ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இரண்டு கட்சிகளுமே பஞ்சாபில் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன.