கடந்த சில நாட்களாக ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்தை நடந்து வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு முதல் வெற்றி கிட்டியது. இப்போது 5 மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு உடன்பாடு அடுத்த நேர்மறை நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கூறியதாவது:-
“காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு சிறிது காலம் எடுத்துக்கொண்டாலும், ஆரம்பத்தில் இருந்தே இந்தியா கூட்டணியில் தான் ஓர் அங்கம் என்பதை ஆம் ஆத்மி கட்சி தெளிவாக வலியுறுத்தி வந்தது.
இறுதியாக டெல்லி, அரியானா , குஜராத், கோவா மற்றும் சண்டிகரில் இந்தியா கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் கட்சி நலனை விட, நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். டெல்லி, அரியானா , குஜராத், மற்றும் கோவாவில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்ததில் இருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எல்லா இடங்களில் இருந்தும் மிரட்டல்கள் வந்தன. கூட்டணியில் இருந்து வெளியேறாவிட்டால், அமலாக்கத் துறையைத் தொடர்ந்து மத்திய குற்றப் புலனாய்வு முகமையும் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என்று கூறப்பட்டது. சிபிஐ திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பும், இன்னும் சில நாட்களில் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது.”
இவ்வாறு அவர் கூறினார். .