3-வது முறையாக பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும்போது என்ன ஏற்படும் என்பது பற்றியும் கிஷோர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், அரசியல் களம் பரபரப்படைந்து உள்ளது. ஆளும் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை தக்கவைக்கவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, ஆட்சியை கைப்பற்றவும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த நிலையில், அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் இந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி வாய்ப்பு, கைப்பற்ற கூடிய தொகுதிகள் உள்ளிட்டவற்றை பற்றிய அவருடைய கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.
இதன்படி, வருகிற மக்களவை தேர்தலில், பா.ஜ.க. தனியாக 370 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான சாத்தியம் இல்லை என அவர் கூறுகிறார். பா.ஜ.க. 2-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. இதனை குறிப்பிட்டு, பிரதமர் மோடி முதன்முறையாக நாடாளுமன்றத்தில் கூறும்போது, பா.ஜ.க. தனியாக 370 தொகுதிகளை கைப்பற்றுவதுடன், தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்றும் என கூறினார்.
தொடர்ந்து பல பேரணிகளில் பேசும்போதும் கூட, 370 தொகுதிகள் இலக்கை பற்றி தொடர்ந்து கூறி வருகிறார். இதுபற்றி குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க. தனியாக 370 மக்களவை தொகுதிகளை கைப்பற்றினால், அது ஆச்சரியம்தான். அதற்கான சாத்தியம் மிக குறைவாக உள்ளது. இல்லையென்றே கூட கூறலாம். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இந்த எண்ணிக்கையை பற்றி பேசி வருகிறார். ஆனால், பா.ஜ.க. தொண்டர்களுக்கான ஓர் இலக்காகவே இது இருக்குமே தவிர, அந்த அளவுக்கு எண்ணிக்கையிலான இடங்களை கைப்பற்றுவதற்கான சாத்தியம் கிடையாது என்றே நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், மேற்கு வங்காளம் மற்றும் தெலுங்கானாவில் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்ற சாத்தியம் உள்ளது. தமிழகத்திலும் கூட முதன்முறையாக இரண்டு இலக்கங்களில் தொகுதிகளை கைப்பற்ற கூடும்.
மேற்கு வங்காளத்தில் சந்தேஷ்காளி போன்ற விவகாரங்கள் ஆளுங்கட்சிக்கு (திரிணாமுல் காங்கிரஸ்) பின்னடைவை ஏற்படுத்த கூடும். ஆனால், சந்தேஷ்காளி விவகாரம் இல்லாவிட்டாலும் கூட வங்காளத்தில் பா.ஜ.க. வளர்ந்து வரவே செய்கிறது. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வின் கணக்கு முடிந்தே விட்டது என்று நினைப்பவர்களுக்கு தேர்தல் முடிவு ஆச்சரியம் ஏற்படுத்தும் என்று கிஷோர் கூறியுள்ளார். 3-வது முறையாக பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும்போது என்ன ஏற்படும் என்பது பற்றியும் கிஷோர் கூறியுள்ளார்.