கன்னியாகுமரி எம்.பி சீட் வழங்கப்படாமல் இருந்ததில் கடந்த சில தினங்களாகவே அதிருப்தியில் இருந்தார் விஜயதரணி. இதனால், அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என தகவல்கள் அடிபட்டது. இந்த நிலையில், வர் பாஜகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து ‘மற்றொரு காங்கிரஸ் எம்பியும் கட்சியில் இருந்து விலகுவார்’ என தகவல் பரவுகிறது. சிட்டிங் எம்பியான திருநாவுக்கரசர் தான் அவர்.
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததற்கு சில காரணங்களையும் முன்வைத்தார் விஜயதரணி. குறிப்பாக, “காங்கிரஸ் கட்சியில் பெண்கள் பெரிய பதவிகளுக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது. நான் உச்ச நீதிமன்ற பிராக்டீஸிங் லாயராக இருக்கிறேன். நாடாளுமன்றத்தில் என்னுடைய பணிகளை தொடர வேண்டும் என்று ஆசைப்பட்டு கன்னியாகுமரி தொகுதிக்கு சீட் கேட்டேன். ஆனால், எனக்கு வழங்கப்படாது என்னும் தகவல் கிடைத்தது. என்னுடைய கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நிறையப் பணிகள் நடைபெறாமல் இருக்கின்றன. ஏற்கெனவே இருந்த எம்.பி-யும், தற்போது இருக்கின்ற எம்.பி-யும் எந்த வேலையையும் செய்யவில்லை” எனக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் விஜதரணி.
தற்போது ’இவரைத் தொடர்ந்து மற்றொரு காங்கிரஸ் எம்பியும் பாஜக அல்லது அதிமுகவில் இணைவார்’ என தகவல் பரவுகிறது. அது சிட்டிங் எம்பியான திருநாவுக்கரசர் தான். கடந்த முறை காங்கிரஸ் சார்பாக திருச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை அதே தொகுதியைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வந்தார் திருநாவுக்கரசர். ஆனால், அவருக்கு உட்கட்சி அளவில் எதிரான மனநிலைதான் நிலவுகிறது.
மேலும், அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், அவருக்கான வாய்ப்பு தள்ளாட்டத்தில்தான் இருந்தது. தற்போது, அவருக்கு அந்த சீட் கிடைக்காது என்பது உறுதி செய்வது போல், திருச்சி தொகுதியை மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவுக்கு கொடுப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.
எனவே, திமுக கூட்டணியில் தனக்கு சீட் வழங்கப்படாது என்பதை உணர்ந்து கொண்ட திருநாவுக்கரசர், காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜக அல்லது அதிமுக இணையவிருக்கிறார் என்னும் தகவல் சொல்லப்படுகிறது.
அதிமுகவில் தன் அரசியல்
பயணத்தைத் தொடங்கிய திருநாவுக்கரசர். 1977-1996 வரை அதிமுக சட்டசபை உறுப்பினராக இருந்தார். எம்ஜிஆர் அமைச்சரவையில் தொழில்துறை, கைத்தறி ஆகிய துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.
1996-ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட அதிருப்தியில் எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார்.
பின் அந்தக் கட்சி சார்பில் 1999-ம் ஆண்டு புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். பின்பு பாஜகவில் சேர்ந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவியும் வகித்தார்.
அதன்பின் 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து, அவர் காங்கிரஸில் இணைந்தார். அங்கு தேசிய செயலாளராக பணியாற்றியிருக்கிறார். 2017-2019-ம் ஆண்டில் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தன் அரசியல் பயணத்தைக் காங்கிரஸில் தொடங்கிய விஜயதரணி, பாஜகவில் ஐக்கியமாகியிருக்கும் நிலையில், திருநாவுக்கரசர் முன்பு இருந்த பாஜக அல்லது அதிமுக செல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை என சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் முணுமுணுக் கின்றன.