திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. 9வது நாளான இன்று (பிப்25) இலட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வழிபாடு நடந்தது. காலை 10.30 மணிக்கு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் மேல் சாந்தி தீ மூட்டினார். அதே நேரத்தில் கோவில் மணி அடிக்கப்பட்டது.
மணியோசை கேட்டவுடன் கோவிலின் பல கி.மீ சுற்றளவில் குவிந்திருந்த பெண்கள் தங்களது அடுப்புகளில் தீ மூட்டி பொங்கலிட தொடங்கினர். சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பானைகளில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு பொங்கல் பானைகளில் அர்ச்சகர்கள் புனித நீர் தெளித்தனர். அதன்பிறகு பெண்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு திரும்பினார்கள்.
ஆற்றுக்கால் பொங்கல் வழிபாட்டை முன்னிட்டு திருவனந்தபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டு
இருந்தது. நகரில் போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டிருந்தது. நேற்று மாலை வரை நகரப்பகுதி எல்லைக்குள் லாரிகள் உட்பட சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது . நாகர்கோவிலில் இருந்து வரும் பஸ்கள் கரமனையுடன் நிறுத்தப்பட்டன.
அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் நாகராஜு தலைமையில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் ஆற்றுக்கால் கோவில் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவில், கொல்லம், எர்ணாகுளம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்களும் 500 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.