நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் தலைகவசம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்ற நடிகர் பிரசாந்த், பொதுமக்களுக்கு தலைகவசம் இலவசமாக வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: நெல்லைக்கு ஜாலியாக வந்தேன். வந்த இடத்தில் ஒரு சேவையை செய்து விட்டுச் செல்கிறேன். தலைக்கவசம் உயிர்க்கவசம் என் சொல்வார்கள். உயிர்க்கவசம் மட்டுமல்ல, குடும்பத்துக்கே அதுதான் கவசம். சாலை விபத்தினால் பலரின் உயிர் போகிறது. தலைக்கவசம் இல்லாததால்தான் உயிரிழப்பு அதிகரிக்கிறது.
இதனால் இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை எடுத்துச் செல்லும் வகையில் என்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக நிறைய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். என்னைப் போன்ற நடிகர், பிரபலமானவர்கள் கூறும்போது மக்களிடம் எளிதாகச் சென்றடையும். நடிகர் விஜய்யுடன் நடிக்கும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. நானும், சகோதரர் விஜய்யும் நடிக்கும் திரைப்படத்திற்கு மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பது மட்டுமின்றி, மக்களை மகிழ்விப்பது மட்டுமின்றி, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் சூப்பர் என்று கூற வேண்டும் என்பதற்காக, இது போன்ற பிரமாண்டமான திரைப்படங்களை செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழில் மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பது, கல்லூரி வாசல் திரைப்படத்தில் இருந்து தொடங்கிவிட்டது. தற்போது நான், சகோதரர் விஜய், பிரபுதேவா எல்லோரும் இணைந்து நடிக்கின்றோம். மிகவும் சந்தோஷமாக உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்யும் பணி விஜய் சாரிடம் அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.