எனது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு முக்கால் தொகை பணத்தை கொடுத்துள்ளது.
ஆனால் அதற்கு பிரதமர் மந்திரி வீடு வழங்கும் திட்டம் என்று கூறுகின்றனர். திமுக காணாமல் போகும் என்று கூறியவர்கள் தான் காணாமல் போய் உள்ளனர். ஆனால் திமுக அப்படியே தான் இருக்கிறது. குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. அரசு விழாவில் எனது பெயரை சொல்வதற்கு கூட பிரதமருக்கு மனமில்லை.
இங்கு ஏவுதளம் அமைப்பது முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கனவு. இதில் எங்களுக்கும் உரிமை உண்டு. அதற்காக நாங்கள் கலந்து கொண்டோம். பாஜக மதத்தை வைத்து அரசியல் நடத்துகிறது. மதம் வேறு, அரசியல் வேறு என்பதை உணர்ந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். மக்களின் உரிமைக்காக போராடுபவர்கள் திமுக என்பதை உணர்ந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அயோத்தியில் கோயில் கட்டுவதில் யாருக்கும் பிரச்னை இல்லை. ஆனால் அதை அரசின் சாதனையாக கூற முடியாது.” இவ்வாறு திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.