ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையில் இயங்கும் அரசு- சாரா அமைப்பு, “நியூஸ் பிராட்காஸ்டிங் – டிஜிட்டல் ஸ்டாண்டர்ட்ஸ் அத்தாரிட்டி” ஆகும்.
இந்த அமைப்பு, வெறுப்புணர்வு, வகுப்புவாதத்தை பரப்புதல், சமூக ஒற்றுமையின்மையை ஊக்குவித்தல், ஆகிய காரணங்களுக்காக 3 தனியார் தொலைக்காட்சி சேனல்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக டைம்ஸ் நவ் நவபாரத் சேனலுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், நியூஸ் 18 இந்தியா சேனலுக்கு ரூ.50,000 அபராதமும் விதித்த அந்த அமைப்பு, ஆஜ் தக் சேனலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த 3 சேனல்களும் அந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பவும் இந்த அமைப்பு தடை விதித்துள்ளது. இது மட்டுமின்றி, 3 சேனல்களும் 1 வார காலத்திற்குள் தங்கள் நிகழ்ச்சி நிரல்களின் இணைய பதிப்புகளில் உள்ள அந்த நிகழ்ச்சிகளை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.
இந்திரஜித் கோர்படே எனும் சமூக ஆர்வலர் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாரபட்சமற்ற தன்மை, நடுநிலைமை, துல்லிய தகவல்கள் தொடர்பான நெறிமுறைகள் மற்றும் ஒளிபரப்பு தரநிலைகளின் விதிகளை இந்த சேனல்கள் மீறியதாக மனுதாரர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
காட்சி ஊடகத் துறையில் சமூக அமைதிக்கு புறம்பான செய்திகளை பரப்பி, அதன் மூலம் டிஆர்பி ரேட்டிங் எனப்படும் தொலைக்காட்சி சேனல்களின் நிகழ்ச்சிகளுக்கான தரவரிசையில் முன்னணி இடம் பிடிக்க சேனல்கள் போட்டி போடுவதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.