மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருந்தடாவது:-
கடந்த 1996-ம் ஆண்டு முதல் சட்டமன்றம் மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட்டுள்ளது. இந்தத் தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக கூறி, தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
அதன்பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் செல்லும் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை என்பதாலும், வேறு எந்தக் கட்சியும் அந்த சின்னத்தை கோரவில்லை என்பதாலும், தங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஜி.அருள்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான், “மக்களவைத் தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானலும் அறிவிக்கலாம். எனவே எங்களது விண்ணப்பத்தை விரைந்து பரீசிலிக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.
இதையடுத்து, மதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மதிமுகவுக்கு அனுமதி அளித்தனர்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.