கேரள மாநிலம் மலப்புரம் அருகே இளம்பெண் தன்னுடைய குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்து உடலை சூட்கேசில் மறைத்து வைத்து ஓடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் அருகே உள்ள வடக்கு மூளியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஸ்ரீபிரியா(19) இவர்களுக்கு 11 மாதமான கரையரசன் என்ற ஆண் குழந்தை இருந்தது. அதே பகுதியை சேர்ந்தவர் குமார்(50) அவரது மனைவி உஷா. இந்த தம்பதிக்கு ஜெயசூர்யா(23) என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீ பிரியாவுக்கும் ஜெயசூர்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நன்றாக பேசிப் பழகிய இருவருக்கும் ஏற்பட்ட ஈர்ப்பு ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இதில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியா திடீரென தனது குழந்தையுடன் கள்ளக்காதலன் ஜெயசூர்யாவுடன் சென்று விட்டார். இதனால் பதறிப்போன மணிகண்டன் பல இடங்களில் தேடினார். ஸ்ரீ பிரியாவின் உறவினர்களும் தேடினர். ஆனாலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஜெயசூர்யாவுடன் சென்ற ஸ்ரீபிரியா கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள
திரூருக்கு வந்து விட்டார். ஒரு வாடகை வீட்டில் ஜெயசூர்யா அவரது தந்தை குமார், தாயார் உஷா மற்றும் கள்ளக்காதலி ஸ்ரீபிரியா, அவரது குழந்தை என அனைவரும் தங்கி இருந்தனர்.
அதே பகுதியில் தான் ஸ்ரீபிரியாவின் உறவினரான சிலம்பரசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீபிரியா கள்ளக்காதனுடன் மாயமான விஷயம் தெரியும். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிலம்பரசன் திரூர் பகுதியில் வைத்து தற்செயலாக ஸ்ரீபிரியாவையும், ஜெயசூர்யாவையும் பார்த்துள்ளார்.
அப்போது அவரிடம் குழந்தை எங்கே என்று கேட்டபோது ஸ்ரீபிரியா திருதிருவென
முழித்துள்ளார். முன்னுக்கு பின் முரணாகவும் பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த சிலம்பரசன் இது குறித்து திரூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் உடனடியாக ஸ்ரீ பிரியாவையும், ஜெயசூர்யாவையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவலை ஸ்ரீ பிரியா தெரிவித்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :
ஸ்ரீ பிரியா தனது குழந்தையுடனும், கள்ளக்காதனுடனும் வந்துவிட்ட போதிலும் அவருக்கு நிம்மதி இல்லையாம். கள்ளக்காதனுடன் ஜாலியாக இருக்க தனது குழந்தை கலையரசன் இடையூறாக இருப்பதாக கருதினாராம். இதனால் ஸ்ரீபிரியாவும், ஜெயசூர்யாவும் சேர்ந்து கலையரசனை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு இருவரும் சேர்ந்து கலையரசனை கழுத்தை
நெரித்திக் கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் குழந்தையின் உடலை ஒரு பேக்கில் வைத்து திருச்சூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஓடையில் வீசியதாக கூறினார். இதையடுத்து போலீசார் இருவரையும் அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு திருச்சூருக்கு விரைந்தனர்.
அங்கு நடத்திய சோதனையில் ஓடை அருகே குழந்தையின் உடல் வைக்கப்பட்ட சூட்கேஸ் கிடைத்தது.
அதனை திறந்து பார்த்தபோது குழந்தை கலையரசனின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. பின்னர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இந்த கொடூர கொலை செய்த ஸ்ரீ பிரியா, ஜெயக்குமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஜெய சூர்யாவின் தந்தை குமார், தாய் உஷா ஆகியோரையும் கைது செய்தனர்.