“துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்க வில்லையா? நான் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றிபெறுவேன்” என நான் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நம்மை மாதிரி அவர்களும் பதிவு செய்யப்பட்ட கட்சி தான். அவர் கர்நாடகாவில் ஒரு சின்னம், ஆந்திராவில் ஒரு சின்னம் வாங்கி இருக்கிறார். 11 மாநிலத்திற்கு ஒரு சின்னம் வாங்கி இருக்கிறார். நான் கேட்கவில்லை. அவங்களாக தான் கொடுத்ததாக சொல்கிறார். தமிழ்நாடு, புதுச்சேரி சேர்த்து 6 மாநிலத்திற்கு கொடுத்ததாகவும் கூறுகிறார். நாங்கள் ஏற்கனவே 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன். 7 விழுக்காடு. இருப்பதிலேயே தனித்த கட்சி என்றால் திமுக, அதிமுகவிற்கு பிறகு நாங்கள் தான்.
அதை ஏற்காமல், அவர் முதலில் மனு கொடுத்ததாக சொல்கிறார்கள். வெள்ள சேதம் காரணமாக தூத்துக்குடி சென்றதால் அந்த நேரம் நான் கொஞ்சம் தாமதமாக கொடுத்தேன். கமல்ஹாசனின் டார்ச் சின்னம் வெளிவரும் போது இதுவும் வருகிறது. இதை கேட்டால் உரிய பதில் சொல்லவில்லை. இருவரிடமும் மனுவை வாங்கி கொண்டு இந்த சின்னத்திற்கு யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அதை செய்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 7 விழுக்காடு ஓட்டு வாங்கியிருக்கும் போது எனக்கு அந்த சின்னத்தை ஒதுக்கி இருக்க வேண்டும். டிசம்பர் 17-ம் தேதி மனு கொடுக்கிறார். அப்போதே சின்னத்தை எடுத்து
கொடுத்தார்கள். ஆனால் நான் சின்னம் வாங்கும் போது தேர்தல் அறிவித்து 10நாட்கள் கழித்துதான் கொடுத்தார்கள். ஆனால் அவருக்கு, தேர்தல் வரவில்லை. தேர்தல் அறிவிக்கவில்லை. டிசம்பர் 17 ஆம் தேதியே எப்படி அந்த சின்னத்தை கொடுத்தீர்கள்? இதை திட்டமிட்டே செய்ததாக தான் நினைக்கிறேன். நாம் கட்சி ஆரம்பித்ததும் விவசாயி சின்னம் வரும்னு இல்லையே. நான் கொண்டு போனதால் தான் விவசாயி. என்னுடைய மாநிலமான தமிழ்நாடு, புதுச்சேரியில் எனக்கு ஒதுக்குங்கள். முன்னுரிமை அடிப்படையில் விவசாயி சின்னம் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நான் வேளாண் குடிமகன் என்பதால் விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறேன். அதையொட்டி சின்னம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் போராடுகிறேன்” இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.