புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆர்த்தியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுவதாக அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதி இரண்டாவது மகள் ஆர்த்தி (9) அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். சிறுமியை பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, மு த்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில், சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. பின்னர் தீவிர விசாரணை நடத்தியதில், சந்தேகத்தின் ரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. சிறுமியை விரைந்து மீட்கக்கோரி குடும்பத்தினரும், உறவினர்களும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே சிறுமிக்கு நீதி கேட்டு புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலியுறுத்தியும், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள், கல்லூரி மாணவ – மாணவிகள், சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள் கருப்பு உடை அணிந்து புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.